மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை ஈரான் படையினரால் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவிற்குத் தேவையானக் கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எண்ணெய் தேவை அதிகரித்தால், அதனைப் பூர்த்தி செய்ய ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளது. எங்களிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா பெற்று வந்த சுமார் 40% எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளில் (Floating Storage) தயார் நிலையில் உள்ளதாகத் தொழில்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1 கோடி பீப்பாய்கள் (10 Million Barrels) ரஷ்ய எண்ணெய் ஆசியக் கடல் பகுதிகளில் உடனடியாகக் கொள்முதல் செய்யக் கிடைக்கும் நிலையில் உள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையினால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $80-ஐத் தாண்டியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா தனது எண்ணெய்யை அதிக அளவில் விற்பனை செய்வதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறித் தனது வருவாயைப் பெருக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே தனது 74 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு குறித்துத் தன்னம்பிக்கை தெரிவித்திருந்தாலும், போர் நீண்ட காலம் நீடித்தால் ரஷ்யாவின் இந்த 'உதவிக்கரம்' இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!