சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும், 11 வயது சிறுமி கடந்த வகுப்பறையில் பேனாவைத் திறந்த போது, மை சட்டை, பாவாடை மற்றும் தரையில் கொட்டியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, தரையைத் துடைக்கும் கட்டையால் சிறுமியைக் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமி படுகாயம் அடைந்த சம்பவத்தை அறிந்ததும் மிகவும் மன வேதனை அளித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாக காரணமான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது தமிழ்நாடு காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

அப்பகுதியை சேர்ந்த திமுக வட்டச்செயலாளரும், 186 வது வட்ட மாமன்ற உறுப்பினருமான மணிகண்டன் தலையீடு காரணமாகவே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா அல்லது பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித்தமிழ்க்குடி என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுகிறதா என்ற அப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்விகள் மிக மிக நியாயமானது என்று சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பல கோடியில் சமாதி கட்டுறீங்க... நெல் சேமிப்பு கிடங்கு கட்ட முடியலையா? திமுக அரசை சாடிய சீமான்...!
தமிழ்நாடு அரசு என்ன பதில் கூறப்போகிறது என்றும் திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் என்றால் ஒரு நீதி., அதிகாரம் மிக்கவர்கள், வசதி படைத்தவர்கள் என்றால் வேறு நீதியா என்றும் இதுதான் திராவிட மாடல் கட்டிக்காத்த சமூகநீதியா எனவும் பெற்றுத்தந்த சமத்துவமா என்றும் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். ஆகவே, சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்றமும், நாடாளுமன்றமும் பல்லாங்குழி ஆடவா? என்ன சீமான் இதெல்லாம்? பாய்ந்தது FIR…!