மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா) நீடித்து வரும் போர் காரணமாக, பாகிஸ்தானில் வரலாறு காணாத எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடு முழுவதும் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய 'ஸ்மார்ட் லாக்-டவுன்' (Smart Lockdown) முறையை அமல்படுத்தியுள்ளது.
வணிக நிறுவனங்களுக்கான நேரக் கட்டுப்பாடு எரிசக்தி மற்றும் மின்சாரத்தைச் சேமிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் (சிந்து மாகாணம் தவிர) பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் மால்கள், அனைத்துச் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். பேக்கரிகள், உணவகங்கள், டீ கடைகள் மற்றும் 'தந்தூரி' கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். இந்தத் தடையிலிருந்து மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு, திருமண மண்டபங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். தனியார் வீடுகளில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளுக்கும் இந்த 10 மணி நேரக் கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??
போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.458.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.520.35 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் அரசுத் துறை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களில் பாதி பேர் வீட்டிலிருந்தே (Work from home) வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு இரண்டு வார கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்த நிலைமைக்கு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக விநியோகம் தடைப்பட்டதுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!