தைவான் விவகாரம் தொடர்பாகச் சீனாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குத் தைவான் அரசு மிகக் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளது. தைவான் எந்தவொரு வெளிநாட்டின் ஆதிக்கத்தின் கீழும் இல்லாத ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திர ஜனநாயக நாடு என அந்நாட்டு வெளியுறவுத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தைவான் முறையாகத் தன்னை ஒரு தனி சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து சுமார் 9,500 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பகுதிக்காக, மற்றொரு போரை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை என்றும் அவர் ஓப்பனாகப் பேசியிருந்தார். ட்ரம்பின் இந்த உரை சர்வதேச அரசியலில், குறிப்பாகத் தைவான் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சுக்குத் தைவான் அதிபர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தைவான் எப்போதுமே எந்தவொரு வெளிநாட்டின் பிடியிலும் அல்லது கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடு என்பதைத் தைவான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தைவானின் அமைதியும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பும் அதன் மக்களின் கைகளில் மட்டுமே உள்ளதே தவிர, அது பிற நாடுகளின் அரசியல் லாபங்களுக்கானது அல்ல எனச் சாடியுள்ளது. பிராந்திய அமைதியைப் பேண அமெரிக்காவுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதே வேளையில் தனது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் தைவான் அரசு தனது அறிக்கையில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு இடையே அமெரிக்க அதிபரின் இந்த பின்வாங்கல் பேச்சு, தைவானை அதிர்ச்சியடைய வைத்துள்ள சூழலில், தைவான் அரசின் இந்தத் துணிச்சலான பதில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: HISTORY CHANGES..!! அமெரிக்க PASSPORT-களில் இனி டிரம்ப் ஃபோட்டோ இருக்குமாம்..!!