தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று இறுதிக்கட்டச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சாத்தூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே சந்திரபாபு நாயுடு ஆற்றிய உரையில் இடஒதுக்கீட்டைத் தடுக்கும் திமுக: "பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டைத் திமுக அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது. மசோதாவைத் தடுப்பது அவர்களுக்குக் கஷ்டமில்லை; ஆனால் இதனால் திராவிட நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கே பெரும் கஷ்டம் ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சீர்திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக தனது பெண் விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது" எனச் சாடினார்.
ஆந்திராவிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவைச் சுட்டிக்காட்டி அவர் பேசுகையில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவு கொடுத்ததால், மத்திய அரசு எங்களுக்கு அதிக முதலீட்டுடன் நிதிப்பங்காக 20.5% தருகிறது. இதே போன்ற வளர்ச்சியைத் தமிழகமும் பெற வேண்டுமானால், இங்கேயும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

திமுகவின் ஆட்சி நிர்வாகம் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் திமுகவின் பேச்சில் மட்டும்தான் வளர்ச்சி இருக்கிறது; ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் ஊழல் மட்டுமே. தமிழகத்தின் வளங்களை அவர்கள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாத்தூர் தொகுதி மக்கள் நயினார் நாகேந்திரனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நேர்மையான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும்" என வேண்டுகோள் விடுத்தார்.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில், நயினார் நாகேந்திரனுக்கு 'தாமரை' சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் இந்தப் பரப்புரை சாத்தூர் தொகுதியின் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மற்றும் பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!