டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் ஓா் செயலிக்கு சீன நிறுவனம் உரிமையாளராக இருக்கக் கூடாது என்பதால், அந்தச் செயலியில் 50 சதவீத முதலீட்டை பைட்டான்ஸ் திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தினார். இல்லையென்றால் டிக்டாக் தடை செய்யப்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

அதன்படி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் 'பைட் டான்ஸ்' (Byte Dance)நிறுவனத்திற்கு சொந்தமான 'டிக்டாக்' செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'டிக்டாக்' செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'பைட் டான்ஸ்' நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், 'டிக்டாக்' செயலி மீதான தடை சட்டத்தால் அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என தெரிவித்தது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.டிக்டாக் மீதான தடையை 75 நாள்கள் தள்ளிப்போட்டார். இரண்டாவது முறை அவர் ஒத்திவைத்த தடை ஜூன் 19ஆம் தேதியுடன் காலவதியாகிறது.
இந்த நிலையில் டிக்டாக்கிற்கான காலக்கெடுவை மேலும் 90 நாள்களுக்கு நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார், இது தொடர்ந்து 3 வது முறையாக தடை தள்ளிவைக்கப்படுகிறது. டிக்டாக் தளத்தை வாங்க அதை நிர்வகிக்கும் பைடான்ஸ் நிறுவனத்துக்கு பெருந்தொகையைக் கொடுக்க ஒரு குழு தயாராக இருப்பதாகத் டிரம்ப் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு 'டிக்டாக்' செயலி உதவியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை.. பிரதமர் மோடி காட்டிய அதிரடியால் கப்சிப் ஆன ட்ரம்ப்..!