அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பாதுகாப்பாக சில நாட்டினரை நாங்கள் குடியேற அனுமதிக்க முடியாது. இதனால் தான் இன்று ஏமன், சோமாலியா, ஹைட்டி, லிபியா மற்றும் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன்.
சமீபத்தில் கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், வெளிநாட்டினர் சிலர் அமெரிக்காவிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்திருந்தார். ஈரான், ஈராக், சூடான், சிரியா, லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போர் நிறுத்தமா? அதுக்கு வாய்ப்பே இல்ல! ட்ரம்பிடம் கொந்தளித்த புதின்.. இனி உக்ரைன் கதி?