இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. நேற்று அதிகாலையில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.
அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது.
இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் ரேட்! இஸ்ரேல் - ஈரான் சண்டையால் டாப் கியரில் கச்சா எண்ணெய்..!

இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமே ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சி தான். இது ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை.தங்கள் நாடுகளை ஈரான் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை முறியடிக்க இரு நாடுகளும் களம் இறங்கின.ஈரானை அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டது.
அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் என்று டிரம்ப் நிர்பந்தம் செயதார்.ஆனால் அதை ஈரான் ஏற்கவில்லை. இதனால் பல கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்றால், இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் சொல்லி இருந்தார்.

எப்படியாவது ஈரானின் மொத்த அணு ஆயுத திட்டங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் பல ஆண்டு கனவு. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வராமல் இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்ததும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று ஒதுங்கி கொண்டது.
இது முழுக்க முழுக்க இஸ்ரேலின் முடிவு. தங்கள் மக்களை காக்க சுயமாக அந்த நாடு முடிவெடுத்து தாக்கதல் நடத்தி இருக்கிறது என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி விட்டது. அதை இஸ்ரேல் முறியடித்தது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென டிரம்ப் அளித்த பரபரப்பு பேட்டி ஈரானை தூக்கி வாரி போட்டு இருக்கிறது. இஸ்ரேல் அட்டாக் குறித்து ஈரானுக்கு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியது: ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது. அவர்கள் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன். வரக்கூடாது என்ற எண்ணத்திலும் பல ஈரான் தலைவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே பல உயிரிழப்புகள் வந்து விட்டன. ஆனால் இந்த படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வர இன்னும் நேரம் இருக்கிறது. அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அடுத்ததாக திட்டமிடப்பட்டு இருக்கும் தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவை. ஒரு காலத்தில் ஈரான் பேரரசு என்று மார்த்தட்டினார்கள். அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்த தாக்குதலில் எதுவும் மிச்சம் இருக்காது என்று ஈரானை டிரம்ப் எச்சரித்தார்.

அதை போல் இஸ்ரேல் மேல் ஈரான் கைவைத்தால் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்றும் அதிரடி காட்டினார். ஒப்பந்தம் போட ஈரானுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தேன். ஒப்பந்தம் போட்டாக வேண்டும் என்பதை உறுதியாக கூறினேன். மிகவும் நெருக்கமாக வந்த ஈரான், அதை செய்யாமலேயே போய்விட்டது.
நான் அவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்; இதன் பின்விளைவு எதிர்பார்த்ததை விடவும், ஏற்கனவே சொன்னதை விடவும் மிகவும் மோசமாக இருக்கும்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் ஆபத்தான ஆயுதங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. அப்படி அமெரிக்கா உருவாக்கிய சக்தி வாய்ந்த பல ஆயுதங்கள் இஸ்ரேலிடம் நிறைய இருக்கின்றன. இன்னும் நிறைய இஸ்ரேலுக்குள் இறங்க போகின்றன. அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும்.

முன்பு சில ஈரானிய தலைவர்கள் துணிச்சலுடன் வாய்ச்சவடால் பேசினர். ஆனால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது அவர்கள் எல்லோரும் இஸ்ரேல் தாக்குதலில் இறந்து விட்டார்கள்.
ஈரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்தால் அமெரிக்காவை காக்கவும், இஸ்ரேலை காக்கவும் தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க தயாராகி வரும் ஈரானுக்கு டிரம்பின் அதிரடி பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்கு புதிய சக்தி கிடைத்து இருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை. இது வெறும் ஆரம்பம் தான். இனி அடுத்தடுத்து தாக்குதல் தொடரும் என்று இப்போது இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இஸ்ரேல் - ஈரான் சண்டையில் நழுவிய அமெரிக்கா!