ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் 'எபிக் பியூரி' ராணுவ நடவடிக்கையால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போரின் முதல் 100 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் ₹33,966 கோடி (4.1 பில்லியன் டாலர்) செலவு செய்துள்ளதாக வாஷிங்டனைச் சேர்ந்த மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்காக அமெரிக்கா தினசரி சராசரியாக ₹8,180 கோடி (சுமார் 980 மில்லியன் டாலர்) செலவு செய்து வருகிறது. இது அமெரிக்காவின் இயல்பான பாதுகாப்புச் செலவை விடப் பல மடங்கு அதிகமாகும்.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் முதல் 100 மணி நேரத்தில், ஏவுகணைகள், வெடிபொருட்கள் மற்றும் எரிபொருளுக்காக மட்டும் ₹33,966 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி (சுமார் ₹28,000 கோடி) பட்ஜெட்டில் ஒதுக்கப்படாத கூடுதல் நிதியாகும்.
இதையும் படிங்க: தலைக்கு மேலே ஏவுகணை சத்தம்...! துபாயில் சிக்கிய பி.வி. சிந்துவின் உருக்கமான எக்ஸ் பதிவு!

அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு 'டோமாஹாக்' ஏவுகணையின் விலை மட்டும் சுமார் ₹16 கோடியாகும். முதல் சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அமெரிக்கா ஏவியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களைப் பராமரிக்க மட்டும் தினசரி ₹500 கோடிக்கு மேல் செலவாகிறது.
மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் நடத்தி வரும் தொடர் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, விலை உயர்ந்த தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்த வேண்டியுள்ளதால் இந்தச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் சில வாரங்கள் நீடிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், போரின் மொத்தச் செலவு டிரில்லியன் கணக்கில் உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவின் இருப்பை ஒழிப்போம்! டெல்லியில் அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!