பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நிலை கொண்டுள்ள இடங்களில் நேற்று இரவு இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலில் ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தலைமையகத்தின் நுழைவு வாயில் அருகே நிகழ்ந்த வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு ஆன்லைன் பொருட்கள் விநியோக நிறுவன ஊழியர், BSF வீரர்களுக்கு பார்சல்களை ஒப்படைக்க வந்திருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது.
அவர் ஒரு பார்சலை வழங்கிவிட்டு தனது ஸ்கூட்டரை நோக்கி நடந்து சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அந்த ஸ்கூட்டர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வெடிப்பின் தீவிரத்தால் அருகிலிருந்த மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதில் அப்பகுதியில் இருந்த ஒரு சிறுவன் லேசான காயங்களுக்கு உள்ளானான். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், வெடித்த ஸ்கூட்டர் அந்த ஊழியருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் திட்டமிட்ட சதியா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பதை அறிய போலீஸார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து முக்கிய மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அடங்கும் முன்பே, இரவு 10.30 மணியளவில் அமிர்தசரசில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட வெடிப்பில் முகாமின் வெளிச்சுவரில் இருந்த தகரக் கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது. வெடிப்பின் சத்தம் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை எதிரொலித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அதன் தாக்கம் அளவுக்கு ராணுவ வளாகத்தின் சுவர்கள் அதிர்ந்ததாகவும் அவர்கள் கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த இரட்டை வெடிப்புகள் பஞ்சாப் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் இரு இடங்களிலும் அப்பகுதிகளைச் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகளின் ஈடுபாடு உள்ளதா, அல்லது உள்ளூர் காரணிகளா என்பதை கண்டறிய முழுமையான தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அமைதியாக இருக்குமாறு நிர்வாகம் கோரியுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்..!! போலீஸ் பாதுகாப்பை நீக்கி பஞ்சாப் அரசு அதிரடி..!!