சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பஸ்தர், நாராயண்பூர், தந்தேவாடா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை சரணடைய செய்யும் நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. சரணடைய மறுக்கும் நக்சல்களை கைது செய்யவும், கைது நடவடிக்கையின் போது தாக்குதல் நடத்தினால், அவர்களை சுட்டு வீழ்த்தவும், நக்சல் எதிர்ப்பு படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்து.
அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை நுாற்றுக்கணக்கான நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத இந்தியா உருவாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா, மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள காடுகள், மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்க, 20 ஆயிரம் வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட நக்சல் எதிர்ப்பு வேட்டையில், அந்த அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நக்சல்கள் பதுங்கியிருந்த கிராமங்களில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு, நுாற்றுக்கணக்கான துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து, நாராயண்பூரின் அபுஜ்மட் வனப்பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காட்டுக்குள் பதுங்கியிருந்து நக்சல்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நேற்று இரவு நடந்த இரு தரப்பு சண்டையில், நக்சல்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காட்டுப் பகுதியில் வீழ்ந்து கிடந்த நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது அந்த உடல்கள் இரண்டும் நக்சல் அமைப்பை சேர்ந்த பெண் போராளிகளுடையது என தெரியவந்தது.
அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, காட்டுக்குள் பதுங்கியிருக்கும் மேலும் பல நக்சல்களை ஒடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பெண் நக்சல்கள் பயன்படுத்தி துப்பாக்கிகள், அவர்களிடம் இருந்த மருந்துப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாராயண்பூர் வனப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான அதிரடிப்படையின் நடவடிக்கை தொடர்வதாக சிஆர்பிஎப் அமைப்பின் பஸ்தர் பிரிவு ஐஜி சுந்தர்ராஜன் கூறினார். நக்சல் வேட்டை தீவிர கதியில் தொடர்வதால் நாராயண்பூரில் பதற்றம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை.. ₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலை உருண்டது..!