ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கனால் கட்டப்பட்டது. சில ஆதாரங்கள் இதை சோழ மன்னரால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. மூலவர் சிலைகள் புனித வேம்பு மரத்தால் (தாது பிரம்மம்) செய்யப்பட்டவை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஜெகன்நாதரின் தேர் (நந்திகோஷா, 16 சக்கரங்கள், சிவப்பு-மஞ்சள்), பலபத்திரரின் தேர் (தலத்வஜா, 14 சக்கரங்கள், சிவப்பு-பச்சை), மற்றும் சுபத்திரையின் தேர் (தேவதளனா, 12 சக்கரங்கள், சிவப்பு-கறுப்பு) செய்யப்படுகின்றன. மேலும் ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் மரத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். மேலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் சென்று வழிபாடு செய்வர்.
இதையும் படிங்க: களேபரமான பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை.. 625 பக்தர்களுக்கு என்ன ஆச்சு..?

வழக்கமாக பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். மேலும் ட்ரோன் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். மேலும், பூரி ஆட்சியர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவத்திற்காக பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில், "சாரதாபலி கோவிலில் மகாபிரபுவை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்ற தீவிர ஆவலுடன் பக்தர்கள் இருந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. தனிப்பட்ட முறையில், நானும் எனது அரசாங்கமும் ஜெகன்நாதரின் பக்தர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். சாரதாபலி கோவிலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்குமாறு மகாபிரபு ஜெகன்நாதரிடம் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களேபரமான பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை.. 625 பக்தர்களுக்கு என்ன ஆச்சு..?