ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கனால் கட்டப்பட்டது. சில ஆதாரங்கள் இதை சோழ மன்னரால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. மூலவர் சிலைகள் புனித வேம்பு மரத்தால் (தாது பிரம்மம்) செய்யப்பட்டவை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஜெகன்நாதரின் தேர் (நந்திகோஷா, 16 சக்கரங்கள், சிவப்பு-மஞ்சள்), பலபத்திரரின் தேர் (தலத்வஜா, 14 சக்கரங்கள், சிவப்பு-பச்சை), மற்றும் சுபத்திரையின் தேர் (தேவதளனா, 12 சக்கரங்கள், சிவப்பு-கறுப்பு) செய்யப்படுகின்றன. மேலும் ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் மரத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். மேலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் சென்று வழிபாடு செய்வர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை? - சட்டையைச் சுழற்ற தயாராகும் தேர்தல் ஆணையம்!

வழக்கமாக பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். மேலும் ட்ரோன் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெற்றது. பின்னர் 2022 முதல் மீண்டும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!