தொடர் மழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், மிசோரம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது


குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பனா - செப்பா சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 32 வயதான சஞ்சு, அவரது மனைவி தாசும், அவர்களது இரண்டு குழந்தைகள் கச்சுங் (5) மற்றும் நிச்சா (2) ஒரு கர்ப்பிணித்தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!


மேலும் பல பயணிகளை ஏற்றி சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது. சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சற்று தள்ளி இருந்ததால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர்தப்பினர். இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு மீட்பு குழுவினரால் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் உயிரிழந்தவர்களுக்கு அருணாச்சலப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மாமா நட்டுங் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் நாட்களில் மேலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மிசோரமில் உள்ள லாங்ட்லாய் நகரில் நேற்று இரவு இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரவில் மூன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 8 பேர் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஏழு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! உஷார் நிலை தீவிரம்..!