உத்தராகண்ட் மாநிலம் ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாகேஷ்வர் பாபாவின் ஹனுமான் கதா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த இக்குடும்பம், நிகழ்ச்சிக்குப் பிறகு டேராடூனுக்கு திரும்பும் வழியில் தங்கள் உயிரை மாய்த்தனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு பஞ்ச்குலா பகுதியில் நிகழ்ந்தது. இரவு 11 மணிக்கு காரில் சந்தேகத்திற்கிடையாக சிலர் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரிலிருந்த 7 உடல்களையும் மீட்டனர். உடனடியாக அந்த உடல்களை தனியார் மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தன. உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (வயது 42). டேராடூனில் சுற்றுலா மற்றும் பயண சேவை தொழிலை தொடங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட பெரிய நஷ்டம் மற்றும் கடனில் சிக்கிய சூழ்நிலை காரணமாக, வாழ்க்கை பெரும் சிரமமானது. இந்த நிலையில் அவர், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பங்கேற்க வந்தார்.
இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!
பிறகு அதே ஏரியாவின் ஒரு பகுதியில் காரை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர். கார் நீண்ட நேரம் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் இருந்த எல்லாரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிரு நிமிடங்களில் 6 பேர் சுயநினைவிழந்து மயங்கினர். பிரவீன் மிட்டல் மட்டும் அழுது கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை வெளியே இழுத்து, என்ன ஆச்சுங்க என விசாரித்தபோதுதான், 7 பேரும் விஷம் குடித்தது தெரிய வந்தது.

என் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மூவரும் இறந்திருப்பார்கள்; நானும் இன்னும் 5 நிமிடம்தான் இருப்பேன் என கண்ணீருடன் பிரவீன் மிட்டல் சொன்னார். சில நிமிடங்களில் அவரும் மயங்கி சரிந்தார். போலீசார் விரைந்து சென்று கார் கண்ணாடியை உடைத்தனர். 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரில் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்தனர். கடன் அதிகமாகி விட்டது. சமாளிக்க முடியவில்லை. அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்கிறோம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர்.
ஆனால், கடிதத்தில் உள்ள முழு விவரங்களை சொல்ல மறுத்து விட்டனர். இந்நிலையில் காரில் இருந்த 7 பேரையும் உயிருடன் பார்த்தது உள்ளூரைச் சேர்ந்த புனீத் ராணா என்ற இளைஞர். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அவர் கூறியதாவது: எங்கள் வீட்டு முன் ஒரு கார் நீண்ட நேரம் நிற்பதாக பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.காரை எடுங்கள் என சொல்வதற்காக காருக்குள் எட்டிப் பார்த்தேன். உள்ளே ஆறேழு பேர் இருந்தனர்.பாபாவின் ஆன்மீக நிகழ்வுக்கு வந்ததாக கூறினார். ஓட்டலில் ரூம் கிடைக்கவில்லை. அதனால் காரிலேயே தூங்கிவிட்டோம் என்றனர்.

உடனே, நான் வீட்டு முன் காரை நிறுத்தாதீர்கள்; வேறு எங்காவது நிறுத்துங்கள் என்றேன். அப்போதான் திடீர்னு அனைவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். நான் அதிர்ந்து போனேன். எல்லாரும் மயங்கி சுயநினைவு இழந்து விட்டனர். சுயநினைவுடன் இருந்த ஒருவரை வெளியே அழைத்து வந்து விசாரித்தபோதுதான் அவர்கள் விஷம் குடித்தது தெரிய வந்தது.
பணக் கஷ்டம் அதான் இந்த முடிவை எடுத்து விட்டோம் என்றார். நான் இன்னும் 5 நிமிடம்தான் உயிரோடு இருப்பேன் என்றார். போலீசார் வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது என புனீத் ராணா தெரிவித்தார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்த சம்பவம் அரியானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே..!! உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!