ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி கட்சி (AAP) அதிரடி முடிவெடுத்துள்ளது. மாநிலங்களவைத் தலைவரின் முடிவை எதிர்த்துத் தொடரப்படவுள்ள இந்த வழக்கால் இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ராகவ் சத்தா தலைமையில் சந்தீப் பாதக், அசோக் மிட்டல் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 எம்.பி-க்கள் அண்மையில் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சி அளித்த மனுவை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். 10 எம்.பி-க்களில் 7 பேர் பிரிந்து சென்றதால், அது 'மூன்றில் இரண்டு பங்கு' பலத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் அவர்களின் பதவி பறிபோகாது என்றும் அவர் தீர்ப்பளித்தார். இந்த முடிவை ஏற்க மறுத்துள்ள ஆம் ஆத்மி தலைமை, நாடாளுமன்ற மரபுகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தை அணுக ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்துப் பேசிய அக்கட்சியின் சட்ட வல்லுநர்கள், "இந்தக் கட்சித் தாவல் என்பது திட்டமிடப்பட்ட ஒரு சதி. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கட்சித் தலைமையின் ஒப்புதல் இன்றி இப்படிச் செல்வதை அனுமதிக்க முடியாது," எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்கள் மக்கள் செல்வாக்கை வைத்துப் பதவி பெற்றுவிட்டு, இப்போது கட்சி மாறியிருப்பதை மக்கள் மன்றத்திலும் கொண்டு செல்ல ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தலையீடு இருக்கும் பட்சத்தில், இந்த 7 எம்.பி-க்களின் எதிர்காலம் மற்றும் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் ஆகியவற்றில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
இதையும் படிங்க: ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!