கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே புரட்டி போட்ட கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் முதன்முறை.. G7 மாநாட்டை புறக்கணிக்கும் மோடி.. கனடாவில் காத்திருக்கும் ஆபத்து..!

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. அதிகபட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் 58 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 41 பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

மீண்டும் வீரியமெடுத்து வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதேநேரம் ஒரே நாளில் 512 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 113 ஆண்கள், 102 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 135 பேர், செங்கல்பட்டில் 24 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரிழிவு, சிறுநீரகம், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் நாம் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!