பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் கூறினார்.
ஆசிய நாடுகளில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. முதலில் ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகம் பிடித்த கொரோனா, தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. 2023ஆம் ஆண்டு பிறகு கொரோனா எண்ணிக்கை ஆயிரத்தை கடப்பது இப்போதுதான் முதல் முறை. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மரணம் அடைந்ததை எடுத்து கொரோனா பீதி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியின்படி கர்நாடக மாநில அரசு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. என்றாலும் மத்திய அரசோ, பிற மாநில அரசுகளோ பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் குறித்து இன்னும் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் பொது இடங்களில் முக்கவசம் அணிவது பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம்" என்று பிரதாப் ராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரும்பவும் முதல்ல இருந்தா..? ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா.. ஹாங்காங், சிங்கப்பூரில் புதிய அலை!