அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனட நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அகமதாபாத்தினுடைய மேக்காணி என்று சொல்லக்கூடிய நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, 10 விமான பணியாளர்கள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த 242 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!
விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்த 10 மருத்துவர்கள் உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 13 பொதுமக்களும் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்கள் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிந்து கடந்த 13ம் தேதி 6 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக டி.என்.ஏ. சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.
உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது. இன்று காலை வரை, 211 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 189 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றில் 189 பேரில் 142 இந்தியர்கள், 32 பேர் இங்கிலாந்து நாட்டினர், 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் ஒரு கனடா நாட்டை சேர்ந்தவர் ஆவர். மேலும் தரையில் இறந்த ஏழு பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!