டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் J-10 CE ரக போர் விமானங்களில் 24ஐ வாங்க வங்கதேசம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய போர்ச்சூழலில் பாகிஸ்தான் தரப்பு பல்வேறு போர் விமானங்களைப் பயன்படுத்தியது. அவற்றில் சீனாவின் நவீன J-10 CE ரக விமானங்களும் அடக்கம். இப்போது அந்த விமானங்களில் 24ஐ வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் வெகு விரைவில் சீனா செல்ல உள்ளார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கமே இந்த ராணுவ விமானக் கொள்முதல் தான் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு அதிகம் என வங்கதேச ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தென் ஆசியப் பிராந்திய ராணுவ சமநிலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ போது பாகிஸ்தான் விமானங்கள் இந்திய தாக்குதலுக்கு உள்ளான பின்னணியில், பாகிஸ்தான் தனது விமானப் படையை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு விமானங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா தயாரிப்பான J-10 CE விமானங்கள் நவீன தொழில்நுட்பம் கொண்டவை என்பதால், வங்கதேசத்தின் வான்படை வலிமை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பக்கம் இருந்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ விமர்சனமும் வரவில்லை. ஆனால் தென் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயம் என வெளியுறவு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை இந்தியா - வங்கதேச உறவுகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
பிராந்திய ரீதியாக ராணுவ வலிமை அதிகரிப்பு போட்டி தொடரும் என்பதால், அடுத்த சில மாதங்களில் தென் ஆசியாவில் ராணுவ ரீதியான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து வாய்விட்ட பாகிஸ்தான்! வச்சு செய்த இந்தியா! ஐநாவில் காரசார விவாதம்!