கர்நாடக மாநில தொழில்துறை பாதுகாப்புப் படையைச் (KSISF) சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் முன்னாள் கைதி இடையே நடந்ததாகக் கூறப்படும் வீடியோ கால் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இரு தரப்பிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள இந்த பெண் அதிகாரி, 2024ஆம் ஆண்டு பெலகாவி அருகே உள்ள ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியாற்றியபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியைச் சேர்ந்த ரவுடி சாய்குமாருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிய காட்சிகள் இப்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
இந்த வீடியோவை சாய்குமார் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக பெண் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இன்ஸ்பெக்டர், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் சாய்குமார், தர்மா உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார். “நான் திருமணமானவள்; குழந்தைகள் உள்ளனர். இந்த வீடியோக்கள் என் மதிப்பைக் கெடுத்து மன வேதனையை ஏற்படுத்தியுள்ளன” என்று அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் அளித்த பிறகு அந்த பெண் அதிகாரி விடுப்பில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!

இதற்கிடையே சாய்குமார் எதிர்ப்புகார் அளித்துள்ளார். ஹிண்டல்கா சிறையில் இருந்தபோது அந்த பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கி செல்போன்கள், மதுபானங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே செல்போன் மூலம்தான் வீடியோ கால்கள் நடந்ததாகவும், சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பெண் அதிகாரி மீது துறைரீதியான விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது.
மேலும் சாய்குமார் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் சிறை அதிகாரிகள் மீது தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பெலகாவி CEN காவல் நிலையத்தில் சிறை அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இந்த இருதரப்பு புகார்களால் சிறைப் பாதுகாப்பு ஓட்டைகள் மற்றும் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. பெரும்பாலான காவல்துறையினர் நேர்மையுடன் பணியாற்றினாலும், சிலரின் இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த காக்கி சட்டையின் மதிப்பையும் களங்கப்படுத்தியுள்ளன என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!