குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியதுமாகும். 16 வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் ஜன சங்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவசரநிலைக் காலத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
முதலில் ஜனதா கட்சியில் பணியாற்றிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்து பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார்.
இதையும் படிங்க: போட்டுக் குழப்பாதீங்க.. இபிஎஸ் எந்த உள்நோக்கத்தையும் பேசல! முட்டு கொடுத்த நயினார்..!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவைப் பகுதியில் பாஜகவின் செல்வாக்கை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவின் ஆதரவின்றி தனித்து போட்டியிட்டு 3.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார். இது கோவை மக்களிடையே அவருக்கு இருந்த ஆதரவை எடுத்துக்காட்டியது. சி.பி. ராதா கிருஷ்ணன் 1990 முதல் 1995 மற்றும் 2001 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 2014 இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கயிறு தலைவராக நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தபோது, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்புகளையும் கூடுதலாக ஏற்றார். பின்னர், மகாராஷ்டிர ஆளுநராக மாற்றப்பட்டார். இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும் என்று கூறினார். இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!