டெல்லியின் மையப்பகுதியில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த ‘சலோ சன்சாத்’ பேரணி ஜூலை 20, 2026 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் போது டெல்லியின் மத்திய பகுதிகளில், குறிப்பாக ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்நடவடிக்கை பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
CJP அமைப்பு மே 2026-ல் தொடங்கப்பட்ட இளைஞர் அமைப்பு. NEET தேர்வு கேள்வித்தாள் கசிவு, மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள், அவர்களுக்கான இழப்பீடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யூனியன் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி வாரக்கணக்காக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். போலீசார் தடுப்புச் சுவர்கள் அமைத்து முன்னேற முடியாமல் தடுத்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: நீட் விவகாரம்... ஓயாத போராட்டம்... மெரினா பீச் செல்ல பொதுமக்களுக்கு தடை..!!
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு உத்தரவின் பேரில் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட மத்திய டெல்லி பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. ஏர்டெல், ஜியோ, வி உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் பலர் இணைய சேவை இல்லாததால் தங்கள் குழுக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். சிலர் போராட்ட இடத்திலிருந்து 1-2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரோ சில நிலையங்களும் மூடப்பட்டன.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!