புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் தயாரிக்கும் திட்டங்களில் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கூட்டாளிகளாக இணைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் ராணுவ தேவைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களில் பெரும் பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை வடிவமைத்து தயாரிக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இதன் விளைவாக இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் எதிர்கால ஆயுத அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் திறனை பயன்படுத்த டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு தனியார் நிறுவனங்கள் கூட்டாளிகளாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் முன்மாதிரி தயாரிப்பு மற்றும் பின்னர் பெரிய அளவிலான உற்பத்தி பணிகளிலும் பங்கேற்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ஜீப்பில் இருந்தே பாய்ந்த ஆயுதம்! இந்தியாவின் புதிய ‘பவர்’! உள்நாட்டிலேயே உருவான Divyastra MK3 ட்ரோன்!

இதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிப்பதற்கான உரிமம், வெடிமருந்துகளை கையாளுவதற்கான அனுமதி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் நிறுவனங்களிடம் இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் ரூ.100 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியிருக்கும் நிதித் தகுதியும் எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு திறனை மதிப்பிடுவதற்காக, அவற்றின் ஆய்வகங்கள் மற்றும் வசதிகளை டிஆர்டிஓ நிபுணர் குழு நேரடியாக ஆய்வு செய்யும். தகுதியான நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப திறன் மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய முன்மொழிவுகளை செப்டம்பர் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிஆர்டிஓ திட்டங்களில் பங்கேற்கும் தகுதிவாய்ந்த கூட்டாளிகளாக பட்டியலிடப்பட உள்ளன. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி சார்பை குறைக்கும் இந்தியாவின் நீண்டகால முயற்சியில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்கள்! ரூ.70,000 கோடி திட்டம்! ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!