இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மே 7, 2026) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அரசு புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும், நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் இருந்த தடைகள் நீங்கியுள்ளன.

ஒட்டுமொத்தமாக விதிகள் விலக்கப்பட்டாலும், மேற்கு வங்க மாநிலத்தின் பால்டா (Falta) சட்டமன்றத் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பால்டா தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் புகார்கள் எழுந்ததால், அங்குள்ள அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21, 2026 அன்று மறு வாக்குப்பதிவு (Re-polling) நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 24-ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிங்க: "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதால், இனி வரும் நாட்களில் தமிழக அரசு தனது வழக்கமான நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளலாம். தேர்தல் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் அரசாணைகள் வெளியாவதற்கான சட்டப்பூர்வத் தடைகள் நீங்கியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!