தற்போதைய டிஜிட்டல் உலகில் எதை வேண்டுமானாலும் தொழில்நுட்பம் உதவியுடன் செய்து முடிக்க முடிகிறது. ஆனால் அது ஆபத்தை உருவாக்கும் சில முயற்சிகளிலும் மனிதர்களை ஈடுபட வைக்கிறது. போலியான வீடியோக்களை உருவாக்குவது, தவறான தகவல்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு அவை வழிவகை செய்கிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் முதலீட்டு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக வீடியோ ஒன்று கடந்த மாதம் வைரலானது.
அதில் ஒருவர் ரூ.21,000 முதலீடு செய்தால் ரூ.1,500,000 ஆக திரும்ப கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறுவது போல அமைக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் லாரன்ஸ் டொமினிக் சேவியர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், 2 பேக்கரிகளையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் குன்னுார் முன்னாள் நகர செயலாளராக இருந்த அவர், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..
இவர்தான் முகநுால் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அதில் வந்த 'லிங்க்'கில் தொடர்புகொண்டு, அதில் கூறியபடி அடுத்தடுத்து பணத்தைச் செலுத்தி இறுதியில் ரூ.33 லட்சத்து 10,472 வரை செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். இதுதொடர்பாக இவர் கொடுத்துள்ள புகாரின்பேரில், பிஎன்எஸ் 318 (ஏமாற்றுதல்) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, உதகை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்ற விளம்பரமுள்ள 'லிங்க்' முகநூலில் அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது. அதில்தான் முதலில் சென்று பார்த்தேன். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பம் என்பது எனக்கு வெகுசீக்கிரமே தெரிந்துவிட்டது.

ஆனால் அதற்குள் வேறு ஒரு 'லிங்க்'கை அனுப்பி அதில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வைத்தார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் திறன் படைத்தவர்கள் மட்டுமே, அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு வர்த்தகம் செய்ய முடியும். மற்றவர்கள் அவர்களுடைய இலக்கு இல்லை!'' என்கிறார் லாரன்ஸ். தொழில்நுட்ப ரீதியாக சரியாக பேசியதால் தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுபோன்ற வீடியோக்கள் லிங்க்களை பின் தொடர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தனர். இதையெல்லாம் தாண்டி தற்போது பிரதமர் மோடியே ஒரு முதலீடு திட்டம் குறித்து பேசுவது போன்ற போலி வீடியோ பரவிவருகிறது.

இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது. பிரதமர் மோடி பேசுவது போல், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதில் ஒரு முறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அந்த வாரமே உங்கள் வங்கி கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் வரும். இந்த திட்டத்தில் சேர, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இதேபோன்று உலா வரும் வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, அரசும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு நறுக்குனு நாலு கேள்வி.. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய விவாதம்.. சிக்கலில் பாஜக..