இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தொடர்ந்து நடக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு பல நாடுகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி பொருட்கள் அனுப்பி வருகின்றன. அந்த வகையில் சிசிலி தீவு பகுதியில் இருந்து கடந்த 6ம் தேதி மட்லீன் என்ற கப்பல், உணவு, மருத்துவ உதவி பொருட்களுடன் காசா பகுதிக்கு புறப்பட்டது. அந்த கப்பலை சர்வதேச கடல் பரப்பில் வைத்து இஸ்ரேல் படையினர் சிறை பிடித்து சோதனை நடத்தினர்.

கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்தி காட்டும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உதவி பொருட்களுடன் சென்ற கப்பலில் சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பர்க், ஐரோப்பிய பார்லிமென்ட் எம்.பி ரிமா ஹசன் உள்ளிட்டோர் இருந்தனர். கப்பல் தொடர்பான படத்தை வெளியிட்ட எம்.பி ரிமா ஹசன், இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறோம் என பதிவிட்டிருந்தார். ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அதை மறுத்தது.
இதையும் படிங்க: ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!

கப்பல் முறையான சோதனைகளுக்கு பிறகு கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கப்பலில் பயணித்தவர்கள் விளம்பரத்துக்காகவும், ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இப்படி செய்திருக்கின்றனர் என்று கூறி உள்ளது. கப்பலில் ஒரு லாரிக்கும் குறைவான உதவிப் பொருட்கள்தான் இருந்தன. இது உதவி இல்லை. விளம்பர ஸ்டன்ட். சிலர் உதவி கொண்டு வருவது போல ஆயுதங்களையும் கொண்டு வரலாம். அதற்காகத்தான் சோதனைகள் நடைபெற்றன என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் மட்லீன் கப்பலில் பயணம் செய்தவர்கள் அதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலின் கடல் முற்றுகை சட்ட விரோதமானது. நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். உலகம் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன்பெர்க் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அவர் ஒரு விசித்திரமான நபர். அவர் ஒரு இளம், கோபக்காரர். அது உண்மையான கோபமா என்று எனக்குத் தெரியவில்லை; நம்புவது கடினம். அவர் நிச்சயமாக வித்தியாசமானவர். அவர் கோப மேலாண்மை வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவருக்கு எனது முதன்மை பரிந்துரை. கிரேட்டா தன்பர்க்கை கடத்தாமலேயே இஸ்ரேல் போதுமான சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!