டெல்லி: மனித வாழ்க்கையில் உன்னதமான பாசப் பிணைப்பாக விளங்கும் குடும்ப உறவுகள், ஒரு கொடூர தீ விபத்தில் சிதைந்து போன நெஞ்சை உருக்கும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தங்கள் குடும்பப் பெரியவரை நலம் விசாரிக்க ஒன்று கூடிய குடும்பத்தின் 8 உறுப்பினர்கள் ஓட்டல் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாகேட் மேக்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயது ராதேஷ்யாம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், இறுதி நேரங்களில் அவருடன் இருக்க பல ஊர்களில் இருந்து குடும்பத்தினர் டெல்லி வந்தனர். அவருக்கு அருகிலேயே உள்ள ஒரு ஓட்டலில் அறைகள் பதிவு செய்து தங்கியிருந்தனர். ஆனால், நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கிக் கொண்டது.

இந்த விபத்தில் ராதேஷ்யாமின் மனைவி பிரேமலதா (70), மகன் விவேக் (47) - சிஏ மற்றும் தனியார் நிறுவன நிதி அதிகாரி, மருமகள் தர்ஜனி (42) - அழகிப் போட்டி வென்றவர், பேத்தி வர்யா (16) - 10-ம் வகுப்பில் 97% மதிப்பெண் பெற்றவர், மற்றொரு பேத்தி ஜிவிஷா (20) - பெங்களூரில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தவர், மனைவியின் சகோதரர் அசோக் (56), சகோதரி கமலா (52) உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். மைத்துனர் ஜாவேரி இன்னும் காணாமல் போயுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!
குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், ராதேஷ்யாமுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என வற்புறுத்தியதால் தங்கியிருந்தனர். இந்தச் சோகம் அவர்களுக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விவேக் தீ பற்றியதும் உறவினர்களுக்கு அழைத்துப் பதற்றத்துடன் தகவல் தெரிவித்தார். ஆனால், மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதம் உயிரிழப்பை அதிகரித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அகர்வால் குடும்பத்தினரின் சமூக ஊடகப் பதிவுகள் அவர்களது பாசப் பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. தர்ஜனி தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், “உன் அம்மா உன்னை நிபந்தனையின்றி நேசிக்கிறாள்” என பதிவிட்டிருந்தது இப்போது நெஞ்சை உருக்குகிறது.
மருத்துவமனையில் இருக்கும் ராதேஷ்யாமுக்கு இந்தச் சோகம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தின் இறுதி அன்புப் பயணம் கொடூரமான முடிவில் முடிந்த இந்தச் சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!