கடந்த 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ரயில்வே மண்டலத்தில் குரூப்-டி பணி நியமனம் நடந்தது. சிலரை வேலைக்கு அமர்த்த அவர்களது நிலங்களை லாலு பிரசாத் லஞ்சமாக பெற்று, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தனர். டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வரும் ஜூன் 2ல் ஆரம்ப விசாரணை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியும் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் லாலு பிரசாத் யாதவ் தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் மே 29ல் வழக்கு தொடரப்பட்டது. அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜர் ஆனார்.
இதையும் படிங்க: சீட் தரேன்னு அதிமுக எழுதிக் கொடுத்தது உண்மை தான்…! அதிருப்தியில் பிரேமலதா?
ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 17A-யின் கீழ் லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையை சட்டப்படி நிலை நிறுத்த முடியாது. அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றார். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங் அந்த வாதத்தை மறுத்தார். ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 19ன் கீழ் தேவையான முன் அனுமதிகள் பெறப்பட்டு உள்ளன என அவர் கூறினார்.

தேவையான முன் அனுமதி என்பது பற்றிய சட்டப்பூர்வமான கேள்விகளை லாலு பிரசாத் யாதவ், விசாரணை நீதிமன்றத்தில் எழுப்பலாம் என நீதிமன்றம் கூறியது. இன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டது. முடிவில் நீதிபதி ரவீந்தர் துடேஜா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது : முன் அனுமதி குறித்த சட்டப்பூர்வ வாதங்களை விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது.

அதற்கு முன் விசாரணையை நிறுத்துவதற்கு கட்டாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி ரவீந்தர் துடேஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு தொடர்பான வாதங்களுக்காக இந்த வழக்கு ஏற்கனவே சிறப்பு நீதிபதியின் முன் பட்டியலிடப்பட்டுள்ளது என்று கூறி லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையும் படிங்க: பொதுக்குழுவில் 27 முக்கிய தீர்மானங்கள்... பாஜகவை டார்கெட் வைத்தது திமுக!