பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் 27 சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் நிதி உதவியும் அளித்து வரும் பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தற்போது அடுத்த கட்டமாக பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இரண்டு நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இந்தக் குழு பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது, சட்ட விரோத பணபரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபடும் நாடுகளைக் கண்காணித்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும். இந்த அமைப்பின் உத்தரவை நிறைவேறற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு 'கிரே' என்கிற பட்டியலில் வைக்கப்படும்.

கடந்த 2018இல் பாகிஸ்தான் 'கிரே' பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதி அளித்தது. அதன் பிறகு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மீண்டும் பாகிஸ்தானை 'கிரே' பட்டியலுக்கு கொண்டு செல்ல இந்தியா முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அந்நாட்டுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது, வெளிநாட்டு முதலீடுகள் தடைபடும். இந்த அமைப்பின் அதிகாரிகளைச் சந்தித்து பேச இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் என்ன நடக்கும்.? அல்லாவுக்குதான் தெரியும்.. ஃபரூக் அப்துல்லா ஆதங்கம்!

மேலும் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2024 ஜூலையில் கையெழுத்தானது.
இந்த நிதியைப் பயங்கரவாத செயல்களுக்கு தவறாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்று புகார் அளிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் தாக்குதல் பீதி.. இந்தியாவிலிருந்து தெறித்து ஓடும் பாகிஸ்தானியர்கள்!