உலகம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பேரல்களுக்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியமான எல்பிஜி எரிவாயு விநியோகம், ஈரானின் ஹார்மூஸ் நீரிணை எனப்படும் குறுகிய கடல் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இந்த கடல் வழித்தடத்தில் சிறிய தடை ஏற்பட்டால்கூட, உலகளாவிய பொருளாதாரத்தையும் எரிசக்தி பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஏவுகணை தாக்குதல்கள், கடல்வழி கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்திய மோதல்கள் என பல்வேறு அச்சுறுத்தல்கள் நிலவி வந்தபோதிலும், இந்திய கப்பல்கள் தொடர்ந்து இந்த பாதை வழியாக பாதுகாப்பாக பயணித்துள்ளன. உலக நாடுகள் அச்சத்துடன் கவனித்த இந்த கடல் பகுதியில் இந்தியா எவ்வாறு தனது கப்பல்களை வெற்றிகரமாக இயக்கியது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும். ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த கடல் பகுதி வெறும் 33 கிலோமீட்டர் அகலம்தான் கொண்டுள்ளது. இருப்பினும் உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் பல நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது.
இந்தியாவுக்கும் இந்த நிலைமை கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 30 சதவீதமும், எல்பிஜி இறக்குமதியில் சுமார் 70 சதவீதமும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகின்றன. இந்த பாதை முற்றிலும் முடங்கியிருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொழிற்சாலை உற்பத்தி பாதிப்பு மற்றும் கடுமையான பணவீக்கம் போன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
போர் தொடங்கிய காலகட்டத்தில் இந்திய கொடி ஏந்திய 36 முதல் 38 வரையிலான வணிகக் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை மற்றும் வளைகுடா பகுதிகளில் இருந்தன. இக்கப்பல்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர். மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் பிற முக்கிய பொருட்களும் இருந்தன.
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆபத்தான பகுதியில் இருந்த 23 முதல் 25 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டன. மே மாத இறுதியில் வெறும் 13 இந்தியக் கப்பல்கள் மட்டுமே வளைகுடா பகுதியில் மீதமிருந்தன. அவற்றில் ஐந்து கச்சா எண்ணெய் டேங்கர்கள், ஒரு எல்பிஜி டேங்கர், ஒரு இரசாயனக் கப்பல், மூன்று கண்டெய்னர் கப்பல்கள், இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் ஒரு தூர்வாரும் கப்பல் இடம்பெற்றிருந்தன.
எந்தக் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்திய அரசு சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கியது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், உரத் துறை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு அவசரமாக தேவைப்படும் கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் உரங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இந்த சூழலில் எம்.டி. ஷிவாலிக் மற்றும் எம்.டி. நந்தாதேவி என்ற இரண்டு எல்பிஜி கப்பல்கள் முக்கியத்துவம் பெற்றன. பிப்ரவரி 26ஆம் தேதி கத்தாரில் இருந்து எல்பிஜி ஏற்றிய எம்.டி. ஷிவாலிக் கப்பல், பாதுகாப்பு மதிப்பீடுகளுக்குப் பிறகு மார்ச் 13ஆம் தேதி பயணத்தைத் தொடங்க அனுமதி பெற்றது. இந்த இரு கப்பல்களும் ஹார்மூஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை வந்தடைந்தன.
இந்த இரண்டு கப்பல்களும் கொண்டு வந்த எல்பிஜி மூலம் இந்தியாவில் சுமார் 32.4 லட்சம் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப முடியும் என மதிப்பிடப்பட்டது. இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க முக்கிய காரணமாக ஈரான் சில நாடுகளுக்கு வழங்கிய விதிவிலக்குகள் அமைந்தன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு குறிப்பிட்ட அனுமதிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியக் கப்பல்கள் வழக்கமான கடல்வழியைத் தவிர்த்து வடக்கு பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்பான "சேஃப் ஷிப்பிங் காரிடார்" வழியாக இயக்கப்பட்டன. கப்பல்கள் ஓமன் வளைகுடா பகுதிக்குள் நுழைந்தவுடன் இந்திய கடற்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.
"ஆபரேஷன் சங்கல்ப்" திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையின் அதிநவீன போர் கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இதன் மூலம் இந்திய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாக் லெட்கி, பைன் கேஸ், ஜாக் வசந்த், பட் டையர், பட் எல்ம் மற்றும் கிரீன் சான்வி உள்ளிட்ட பல கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்மூஸ் நீரிணையை கடந்தன. இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களும் பாதுகாப்பாக அரபிக்கடலை வந்தடைந்தன.
அதேபோல், இந்தியாவுக்கான சுமார் 2.70 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற "நிசோஸ் கேரோஸ்" கப்பல் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளின் நள்ளிரவில் ஹார்மூஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்தது. இந்த கப்பல் ஜூன் 3ஆம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பியிருந்தாலும், வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகின. மார்ச் 1ஆம் தேதி ஓமனின் வடக்குப் பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஸ்கைலைட் டேங்கர் கப்பலில் பணியாற்றிய இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். அதேபோல், எம்.கே.டி. வியோம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.
தற்போதைய தொழில்நுட்ப சூழலில், கப்பல்களின் பயண விவரங்களை ஏஐஎஸ் (Automatic Identification System) மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க முடிகிறது. இதனால் பாதுகாப்பு சவால்களும் அதிகரித்துள்ளன. சில கப்பல்கள் ஆபத்தான பகுதிகளில் பயணிக்கும் போது ஏஐஎஸ் சிக்னல்களை அணைத்து வைத்து "டார்க் டிரான்சிட்" முறையில் இயக்கப்படுகின்றன. ஆனால் இதனால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
மற்றொரு முக்கிய பிரச்சினையாக காப்பீட்டு சவால்கள் இருந்தன. போர் அபாயக் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், சில காப்பீட்டு நிறுவனங்கள் சேவைகளை வழங்க மறுத்தன. இதனால் சில நேரங்களில் அரசாங்கத்தின் உத்தரவாதமும் தேவைப்பட்டது.
இதற்கிடையில், மே 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இது நடைமுறைக்கு வந்தால் கப்பல் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்புவதற்கும் காப்பீட்டு செலவுகள் குறைவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வகையான தற்காலிக தீர்வுகள் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யாது. ஈரான் தொடர்பான பதற்றம் முழுமையாக குறைந்து, பிராந்திய அமைதி நிலைநிறுத்தப்பட்டால்தான் உலக பொருளாதாரத்திற்கும் எரிசக்தி விநியோகத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய முடியும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
இதையும் படிங்க: ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!