வயது வெறும் எண்ணிக்கை தான்; அதற்கும் சாதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் சாதனை படைத்த 50 வயதுக்கு மேற்பட்ட பிரபலங்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை இந்த நாளிதழ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டது.
இதில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:-
இதையும் படிங்க: ஜாதி கட்சியா இது? - எல்.முருகன் முன்பே மல்லுக்கட்டிய பாஜகவினர் - நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களால் அதகளம்!
80 வயதில் விருதுகளை குவித்து வரும் ஊர்மிளா
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஊர்மிளாஆஷர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிக்கிறார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. இந்த வயதிலும் பல்வேறு சமையல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறார்.

தனது மூன்று குழந்தைகளின் மரணம் உட்பட கற்பனைக்கு எட்டாத தனிப்பட்ட இழப்பை சகித்துக் கொண்ட அவர் பிற்காலத்தில் தனது புதிய நோக்கில் வெற்றி கண்டார். 75 வயதில் கொரோனா தொற்று நோய் உட்பட பல்வேறு இன்னல்களில் இருந்து நீண்ட ஊர்மிளா புதிய உணவு வணிகத்தை தொடங்கினார்.
ஊறுகாய் மற்றும் தின்பண்டங்களில் தொடங்கி தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அனுபவத்துடன் தனது ஆர்வத்தை மற்றவர்களை ஊக்குவிக்கும் ஓர் தலமாக மாற்றியவர் இந்த ஊர்மிளா.
கிரண் மஜும்தார் ஷா
கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயோகான் நிறுவனத்தின் தலைவராக கிரண் மஜும்தார் ஷா (71) உள்ளார். நாட்டின் மிகச் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக அவர் போற்றப்படுகிறார்.

3.6 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான இவர் உயிரி மருந்து துறையில் முன்னணியில் இருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் துறை நொதிகளில் கவனம் செலுத்திய அவர் உலக அளவில் மலிவு விலையில் மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்தை உயிரி மருந்து ஆற்றல் மையமாக மாற்றி சாதனை படைத்தார்.
வழக்கத்துக்கு மாறான சிந்தனையாளர் ஆன அவர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக கொண்டாடப்பட்டு வருகிறார். வணிகத்திற்கு அப்பால் அர்ப்பணிப்பு மிக்க நன்கொடையாளர் அவர். பெங்களூருவை தளமாக கொண்ட கொண்ட புற்றுநோய் மையம் மற்றும் நகர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளித்து உலக அளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருபவர் இவர்.
ஷீலா படேல்
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஷீலா படேல் (72), கடந்த 1984-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அவர் மேம்படுத்தி வருகிறார்.

ஷீலா படேலின் முயற்சியால் ஏழை குடும்பங்களுக்காக 11 அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷீலா படேலின் தன்னார்வ தொண்டு அமைப்பு சேவையாற்றி வருகிறது.
1952 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளராக விளங்கி வருகிறார். 33 நாடுகளில் விரிந்து பரவி இருக்கும் சர்வதேச குடிசை வாழ் மக்கள் நலனுக்கான அமைப்பை நிறுவினார்.
இதையும் படிங்க: இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குரத்து: மானசரோவர் யாத்திரையும் தொடக்கம்