ஈரான் உச்சத் தலைவரின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் தயாரிக்காது என்றும், தற்போதைய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பேட்டியில் அவர், “எங்கள் தலைவர் அணு ஆயுதங்களை தடைசெய்யப்பட்டவை (ஹராம்) என்று உத்தரவிட்டார். எங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அதை தயாரிக்கவோ வைத்திருக்கவோ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்பினாலும் யாராலும் எங்களைத் தடுக்க முடியாது” என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய “ஈரான் என்னை உச்சத் தலைவராக்க விரும்பியது, நான் மறுத்தேன்” என்ற கருத்தை கேலி செய்த அவர், “டில்லியில் ஒரு இளைஞனிடமிருந்து இதைப் பற்றி கேள்விப்பட்டேன். அவன் சிரித்துக் கொண்டிருந்தான்” என்றார்.
இதையும் படிங்க: 3 வார போரில் அமெரிக்கா வெற்றி! ட்ரம்ப் மார்தட்டல்!! அணு ஆயுதம் வைத்திருக்க போவதில்லை என ஈரான் ஒப்புதல்?!!
இந்தியா-ஈரான் உறவுகள் பற்றி பேசிய இலாஹி, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனை தொலைபேசியில் அழைத்து நல்ல உரையாடல் நடத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சரும் ஈரான் தரப்புடன் பலமுறை பேசினார். இரு நாடுகளும் பிராந்திய அமைதியை விரும்புகின்றன” என்று கூறினார்.
5,000 ஆண்டுகள் பழமையான இந்திய-ஈரான் நட்பை சுட்டிக்காட்டிய அவர், “இந்திய மண் நீதி, சுதந்திரம், விடுதலை மற்றும் தாராள மனப்பான்மையின் பூமி. இங்கு என் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். இந்திய மக்கள் அன்பானவர்கள், நேர்மையானவர்கள்” என்று பாராட்டினார்.
போர் தொடர்பாக அவர், “போரைத் தொடங்கிய நாடுகள் ஆயுத விற்பனை மூலம் ஆதாயம் தேடுகின்றன. எண்ணெய் விலை உயர வேண்டும் என விரும்புகின்றன. ஏழை மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை” என்று விமர்சித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு குறித்து பேசிய அவர், “பாதுகாப்பு நிலை சீர்குலைந்துள்ளது. அனைத்து நாடுகளும் டிரம்ப் உள்ளிட்டோரை போரை நிறுத்துமாறு கேட்க வேண்டும். அவர்கள் இரவு பகல் என குண்டு வீசுகின்றனர். மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்” என்றார்.

குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இறப்புகள் பற்றி பேசிய அவர், “270க்கும் மேற்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். டெஹ்ரானில் காந்தி குழந்தைகள் மருத்துவமனை தாக்கப்பட்டது.
ஒரு தொடக்கப் பள்ளியில் 175 மாணவிகள் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார். பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது என்ற செய்தியை மறுத்த அவர், “அது உண்மையல்ல. வெறும் ஊடக பரபரப்பு” என்றார்.
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி பேசிய இலாஹி, “அவர் என் நண்பர், வகுப்புத் தோழர். அறிவாளி, பணிவானவர். வாடகை வீட்டில் வசிக்கிறார். கார், வங்கிக் கணக்கு இல்லை. பாலும் ரொட்டியும் வாங்க கடன் வாங்கியவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். தன் கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் விற்க மாட்டார்” என்று விவரித்தார்.
இந்தியா போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த இலாஹி, உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த பேட்டி, தற்போதைய மேற்காசியப் பதற்றத்தின் மத்தியில் இந்தியா-ஈரான் உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 10 நாள் போர் நிறுத்தம் ஏன்?! படைகளை குவிக்கும் ட்ரம்ப்!! ஈரானை முடித்துக் கட்ட அமெரிக்கா போடும் ஸ்கெட்ச்!