ஜம்மு மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் போலி செய்திகள், வெறுப்பு பரப்பும் உள்ளடக்கங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகள் பரவுவதைத் தடுக்கும் விதமாக 60 நாட்கள் கால அவகாசத்தில் அதிரடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஜம்மு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ் (ஐஏஎஸ்) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவு 163-ன் கீழ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சாதி, மதம், மொழி, இனம் அல்லது பிராந்திய அடிப்படையில் சமூகங்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது தீங்கு விளைவிக்கும் எந்தவித உள்ளடக்கத்தையும் - உரை, படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், மீம்ஸ்கள், ரீல்ஸ் உள்ளிட்டவை - சமூக வலைதளங்களில் பதிவிடுவது, பகிர்வது அல்லது பரப்புவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட (டாக்டர்ட்) வீடியோக்கள், சூழலுக்கு பொருந்தாத படங்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான வதந்திகள், மொபைல் வன்முறையைத் தூண்டும் அழைப்புகள், பாய்காட் அல்லது அச்சுறுத்தல்கள் போன்றவற்றையும் இந்தத் தடை உள்ளடக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்..!! 4.6 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!
இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் போலி செய்திகள் வேகமாகப் பரவி சமூக மோதல்களைத் தூண்டும் அபாயம் அதிகரித்துள்ளதாகும். மாவட்ட நிர்வாகம், இத்தகைய உள்ளடக்கங்கள் பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. மீறுபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

சில சந்தர்ப்பங்களில் ஆயுள் தண்டனை வரைக்கும் சட்ட வாய்ப்புகள் உள்ளன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களின் நிர்வாகிகள் (அட்மின்கள்) தங்கள் குழுக்களில் இத்தகைய தடை செய்யப்பட்ட பதிவுகள் வராமல் தடுக்க வேண்டும். மீறினால் அவர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் இத்தகைய உள்ளடக்கங்கள் கண்காணிக்கப்படும்.
உப மாவட்ட அளவிலும் தனி குழுக்கள் செயல்படுத்தப்படும். இந்த உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும். தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம். இந்த நடவடிக்கை ஜம்மு மாவட்ட மக்களிடையே சமூக அமைதியை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!