ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,
அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் போலீஸ் காவலில் பல தகவல்கள் வெளிவந்தன. அவருடைய லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் ஜோதி மேற்கொண்ட உரையாடல்கள், அவர்கள் உடனான அழைப்புகள், பண பரிவர்த்தனைகள் போன்ற தகவல்களும் இருந்தன.

4 பாகிஸ்தானியர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.

அவர் பாகிஸ்தான் சென்ற சமயத்தில் லாகூரில் அங்குள்ள அனார்கலி பஜாரை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்.ஸ்காட்லாந்து நாட்டு யூ-டியூபர் கல்லம் மில் Kalum Mill என்பவர் அந்த பஜாரில் இருந்தபோது, ஜோதி மல்ஹோத்ராவை சந்தித்து பேசி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.
வீடியோ காட்சிகளில், தனக்கு முன் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய நான்கு நபர்கள் இருப்பதாக கல்லம் தெரிவிக்கிறார். ஜோதியுடன் கல்லம் மில் பேசி முடிக்கும் வரை, துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது தெரிகிறது.

தான் ஒரு இந்தியர் என்று ஸ்காட்லாந்து யூ-டியூபரிடம் ஜோதி சொல்கிறார். பாகிஸ்தானில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என கல்லம் கேட்டபோது பாகிஸ்தான் வாழ்க என ஜோதி மல்ஹோத்ரா பதில் அளித்தார்.
பாகிஸ்தானில் வரவேற்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜோதி, மிகவும் அருமை என கூறி இருக்கிறார்.
ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் இருந்த போது உளவு துறை அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார். அவருடைய செலவுகள் வருமானத்துடன் பொருந்தவில்லை. பாகிஸ்தான் அவருக்கு நிதி உதவி செய்திருக்கிறது. சீனாவுக்கும் ஜோதி சென்று ஊர் சுற்றிப் பார்த்துள்ளார் என ஹரியானா போலீசார் விசாரணைக்கு பின் தெரிவித்தனர். 5 நாள் போலீஸ் காவல் முடிந்ததால் அவர் நேற்று ஹரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாதுகாப்பு படையில் கருப்பு ஆடு.. ராணுவ தகவல்கள் கசிந்தது இப்படி தான். பாக்.-க்கு உளவு பார்த்த CRPF வீரர் கைது..!