நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர். மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 33 போ் காயமடைந்தனர். இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

அப்போது விளக்கம் அளித்த மாநில போலீசார், கர்நாபாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 105 (கொலைக்குக் காரணமான குற்றமில்லாத மரணம்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 118(1) (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்), 118(2) பிரிவு 3(5)-உடன் இணைந்து (பொதுவான நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்படும்போது தானாக முன்வந்து பலத்த காயம் ஏற்படுத்துதல்), 190 (சட்டவிரோத கூட்டம்), 132 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 125(a) (பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல்), மற்றும் 125(b) (மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் ஆய்வறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

அதோடு கூட்ட நெரிசல் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றப்பட்டதாக நீதிமன்றத்திற்கு மாநில அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மாநில அரசுக்கு நீதிமன்றம், வெற்றி விழாவை நடத்தியது யார், எப்போது முடிவு செய்யப்பட்டது? எந்த வகையில் முடிவு செய்யப்பட்டது?, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, பொதுமக்கள்/கூட்டத்தை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, நிகழ்வு நடைபெறும் இடத்தில் என்ன மருத்துவ மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டிருந்தன?

விழாவின்போது எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டதா?, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டதா? இல்லையென்றால், ஏன்?, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவு நேரம் ஆனது?, 50,000-க்கும் அதிகமானோர் கூடும் விளையாட்டு நிகழ்வு அல்லது இது போன்ற கொண்டாட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் நிலையான இயக்க நடைமுறை (SOP) உருவாக்கப்பட்டதா?, நிகழ்வை நடத்த ஏதேனும் அனுமதி பெறப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசு அவகாசம் கோரியுள்ளது.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!