டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ரோஸ் அவென்யூ கோர்ட் பெரும் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, "மொத்த சதி அல்லது குற்ற எண்ணம் இல்லை" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணைக்கு கூட போதுமான ஆதாரம் இல்லை என்பதால், வழக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. கெஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!
நீதிமன்றம் சிபிஐயின் விசாரணையை கடுமையாக விமர்சித்து, "கேள்விக்குரிய ஆதாரங்கள், செயல்முறை குளறுபடிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது. சிபிஐ இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கடுமையான கருத்து தெரிவித்தார். "குஜராத், பஞ்சாப் தேர்தல்களை மனதில் வைத்து, ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.
காங்கிரஸை ஒழிக்கும் 'காங்கிரஸ் முக்த் பாரத்' திட்டத்தின் பகுதியாக இது அமைந்துள்ளது" என்று அவர் கூறினார். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடினார். "இது வழக்கே இல்லை. எங்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. பாஜகவின் திட்டமிட்ட சதி என்பதை நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் என்ன மனநிலையில் பேசுகிறார்கள் என புரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "நான், சிசோடியா, சஞ்சய் சிங் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டோம். ஆனால் ராபர்ட் வாத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி யாரும் சிறை சென்றார்களா? எங்களை அவதூறு பேச அவர்களுக்கு வெட்கமில்லையா?" என்று கோபத்துடன் கேட்டார்.
"ஆதாரங்களை அழித்துவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர். நீதிபதி அறைக்குள் சென்று அழித்தோமா? ஆதாரம் இருந்தால் தானே வழக்கு நீடிக்கும். இல்லை என்பதால் தான் நீதிமன்றம் எங்களை விடுவித்துள்ளது" என்றும் விளக்கினார்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றாலும் வழக்கு நிலைக்காது எனவும், ஆதாரம் இல்லாதவர்கள் எங்கிருந்து ஆதாரம் கொண்டு வருவார்கள் என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். I.N.D.I.A கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ்-ஆம் ஆத்மி ஒன்றாக பிரசாரம் செய்த நிலையில், இப்போது ஆம் ஆத்மி கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறது. கெஜ்ரிவாலின் இந்த பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹப்பாடா!! ரொம்ப பெரிய நிம்மதி!! மதுபான கொள்கை முறைகேடு வழக்கு! கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!