கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். அதன்பின்னர், எந்தவொரு கட்சிக்கும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை. அரசியலமைப்பின் 180வது பிரிவின்படி, துணை சபாநாயகர், தலைவர் பதவி காலியாக இருக்கும்போது, சபாநாயகரின் கடமைகளைச் செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார். அந்த பதவி தொடர்ந்து காலியாகவே உள்ளது. இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 93-ஐ மேற்கோள்காட்டி, மக்களவைத் தலைவர் பொறுப்பும், துணைத் தலைவர் பொறுப்பும் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் மிகவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்புச் சட்டத்தின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இரண்டு பதவிகள் காலியாகும் போது, மற்றொரு உறுப்பினர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதையும் படிங்க: சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகரின் நடைமுறையைப் பிரதிபலிக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 8(1) இன் படி, துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதி சபாநாயகரால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மக்களவை முதல் 16-ஆவது மக்களவை வரை, ஒவ்வொரு சபையிலும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது என்பது நன்கு நிறுவப்பட்ட ஒரு மரபு.

இருப்பினும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக இரண்டு மக்களவை பதவிக் காலங்களுக்கு காலியாகவே உள்ளது. 17-ஆவது மக்களவையின் போது எந்த துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் இந்த முன்னுதாரணமானது தற்போது நடைபெற்று வரும் 18-ஆவது மக்களவையிலும் தொடர்கிறது. இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!