அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜனநாயக வழியில் நீதிக்காகப் போராடுவதைக் குற்றமாகக் கருத முடியாது என்ற சி.வி.சண்முகம் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் நான்கு வழிச்சாலை அருகே போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறி, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு சமூகக் கொடுமைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராடுவதைச் சட்டவிரோதமாகக் கூடுவதாக (Unlawful Assembly) ஒருபோதும் கருத முடியாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!
இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற சமூகச் சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குப் போடுவது ஜனநாயகத்தைக் குலைக்கும் செயல் என அக்கட்சியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆகம விதிகளை மீறக்கூடாது....! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!