சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தவறான தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில், இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் இனி சேர முடியாது என்றும், ஏற்கனவே பயனடைந்து வந்த 80 லட்சம் பெண்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பலரிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தின் படி, இந்த தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன், தற்போது 1.31 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் நிதியுதவி பெற்று வருகின்றனர். கடந்த மே மாதத்திற்கான உரிமைத் தொகையும் வழக்கம்போல பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

80 லட்சம் பெண்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவலின் பின்னணியை ஆய்வு செய்தபோது, அது தமிழ்நாட்டைச் சார்ந்த செய்தி அல்ல என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் சுமார் 80 லட்சம் பெண்கள் தகுதி ஆய்வின் அடிப்படையில் நீக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அந்தச் செய்தியை சிலர் திரித்து, தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் தவறான தகவலாகப் பரப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!
தமிழ்நாடு அரசு இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டதாகவோ, திட்டம் நிறுத்தப்பட்டதாகவோ, புதிய பயனாளிகள் சேர முடியாது எனவோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை நம்பாமல், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான தகவல் மூலங்களின் மூலம் மட்டுமே தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் வலியுறுத்தி உள்ளது.
இதனால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டதாக பரவி வரும் தகவல் உண்மையல்ல என்பதும், திட்டம் வழக்கம்போல தொடர்ந்து செயல்பட்டு வருவதும் தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!