மகாத்மா காந்தி தனது கையால் எழுதிய அரிய கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை என கூறப்படுவதால், இந்த ஏலம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த அரிய கடிதங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் மட்டுமல்லாமல், மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக பார்க்கப்படுகின்றன.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஆனந்த் டி. ஹிங்கோரனி, மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார். ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்தபோது, அவருக்கு ஆறுதலும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் காந்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியாவின் அதிரடி! ஜேசிபியுடன் களமிறங்கிய அதிகாரிகள்!
இவ்வாறு தொடங்கிய கடிதப் பரிமாற்றம் சுமார் 23 மாதங்கள் நீடித்தது. இந்த காலகட்டத்தில் காந்தி மொத்தம் 688 கடிதங்களை எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மை, அஹிம்சை, சேவை, மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கருத்துகள் இந்த கடிதங்களில் இடம்பெற்றிருந்தன.

பின்னர் இந்த கடிதங்கள் அனைத்தும் “A Thought for the Day” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்வதுடன், காந்திக்கும் ஹிங்கோரனிக்கும் இடையேயான நட்பு, தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் காந்தியின் வழிகாட்டுதலையும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிலையில், மும்பையில் உள்ள சப்ரோன்ஆர்ட் ஏல மையத்தில் “Gandhi: From the Collection of Anand T. Hingorani” என்ற தலைப்பில் சிறப்பு ஏலம் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய வரலாற்று ஆவணங்கள் இடம்பெற்றன.
ஏலத்தின் முக்கிய ஈர்ப்பாக இருந்த காந்தியின் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. சுதந்திரப் போராட்ட வரலாற்றை நேரடியாக பதிவு செய்துள்ள இந்த ஆவணங்கள், காந்தியின் அரசியல் சிந்தனைகளுக்கு மட்டுமின்றி அவரது மனிதநேய அணுகுமுறைக்கும் முக்கிய சான்றுகளாக கருதப்படுகின்றன.
பல தசாப்தங்களை கடந்தும் காந்தியின் கையெழுத்து ஆவணங்களுக்கு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய தொகை, வரலாற்று ஆவணங்களின் அருமையையும் அவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் ஏவுகணை தயாரிப்பில் இனி தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு: டிஆர்டிஓ அதிரடி அழைப்பு!