மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆறு இடங்களில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும் அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த முறை திமுகவுக்கு கிடைக்கும் நான்கு இடங்களில் ஓரிடத்தை மக்கள் நீதி மையம் கட்சிக்கு வழங்க உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை மக்கள் நீதி மையம் கட்சி ஆதரித்தது அப்போது அக்கட்சிக்கு மாநிலங்களவையில் ஓரிடம் வழங்குவதாக திமுக ஒப்பந்தம் செய்தது. அதன்படி மக்கள் நீதி மையம் கட்சிக்கு திமுக ஓர் இடத்தை ஒதுக்கும் என்பது உறுதியாகி உள்ளது. அந்த இடத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அக்கட்சி தொண்டர்கள் குஷியாகியுள்ளனர்.
இதையும் படிங்க: நாதகவிற்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு..! சந்தோஷத்தின் உச்சத்தில் சீமான்..!

எஞ்சிய மூன்று இடங்களில் திமுக தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களிலும் அதிமுகவும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் பாஜகவும் பாமகவும் ஓரிடம் கோரலாம் என்றும் ஊகங்கள் கிளம்பியுள்ளன.
இதையும் படிங்க: மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன்குடம்..! தமிழில் பேசி தெறிக்கவிட்ட பவன் கல்யாண்..!