பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.

அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என இதுவரை பலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர். கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் பழகி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னை மீறி தொடுடா பாக்கலாம்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்.. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேச விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக குற்றஞ்சாட்டி, சைபர் மோசடியில் ஒரு பெண் ரூ. 22 லட்சம் இழந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 64 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 5ம் தேதி செல்போனில் புதிய நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் டெல்லியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் வேலை செய்வதாக கூறியிருக்கிறார். மேலும், அந்த பெண்ணிடம் நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கிறீர்கள், இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. மேலும் நீங்கள் உளவு பார்த்ததற்காக உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் 22 லட்ச ரூபாய் தரும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அப்பெண், மிரட்டலுக்கு பயந்து அந்த நபர் கொடுத்த வெவ்வேறு வங்கி கணக்குகளில் 5 நாட்கள் இடைவெளியில் மொத்தம் 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.

பின்னர், 10ம் தேதிக்குப் பிறகு அந்த நபரிடமிருந்து எந்தவித செல்போன் அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த பெண் தான் சைபர் குற்றவாளியின் வலையில் சிக்கி 22 லட்சம் ரூபாயை இழந்ததை உணர்ந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்டால், பணத்தை அனுப்ப வேண்டாம், உடனடியாக புகார் தெரிவியுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவுக்கு டார்க்கெட்! பாக்.உடன் உறவு கொண்டாடும் அமெரிக்கா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா..!