கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது எழுமேடு என்ற ஊர். இந்த சிறிய ஊரில் அமைந்துள்ள பச்சைவாழி அம்மன் கோவில், பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், கிராம தெய்வ வழிபாட்டின் சிறந்த உதாரணமாகும். இந்த இடம், பச்சைபசேல் என்று அழைக்கப்படும் வயல் நிலங்களின் மையமாக இருந்தது. இக்கோவிலின் பிரதான தெய்வமான பச்சைவாழியம்மன், சக்தியின் அம்சமாக வழிபடப்படுகிறார். அம்மன், பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையாக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பச்சைப் புடவை சாத்தி வழிபடுவது, பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனாகும். 
இந்த பச்சைவாழி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்த நிலையில், பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். 

 போராடிய மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். பல்லாண்டுகாலமாகப் பல சமுதாய மக்களின் குலதெய்வமாகத் திகழ்ந்து, நல்லமுறையில் பராமரிக்கப்படும் கோவிலைத் திடீரென அரசு கையகப்படுத்துவது ஏன் எனும் கேள்வி பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது என்று தெரிவித்தார். சொந்த அரசியல் ஆதாயத்திற்காகவும், கோவில் சொத்துகளை அபகரிப்பதற்காகவுமே இக்கோவில் ஆக்கிரமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: SIR - ஐ எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பது ஏற்க முடியாதது... சுத்த விடப் போறாங்க! MP மாணிக்கம் தாகூர் பேட்டி...! 
எனவே, பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக விளக்கமளித்துப் பக்தர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், திருக்கோவிலை ஆக்கிரமிக்கும் திட்டம் ஏதேனும் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும் எனத் திருக்கோவில் பக்தர்கள் சார்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஐயா! சொன்னீங்களே... செஞ்சிங்களா? நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு நயினார் விளாசல்...!