நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய 77 நாட்களுக்குப் பிறகு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 நபர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் 2026 மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசின் உயர்கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ கடந்த மே 12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கின் விசாரணைக்காக சிபிஐ சார்பில் 72 அதிகாரிகள் மற்றும் 8 சைபர் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 92 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!
இந்த சோதனையின் போது, வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தேசிய தேர்வு முகமையுடன் (NTA) தொடர்புடைய இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாட நிபுணர்கள் மூவரும் அடங்குவர். மேலும், வினாத்தாள்களை பெற்று விநியோகித்ததாகக் கூறப்படும் இடைத்தரகர்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள், லாக்கர்கள் மற்றும் டிமேட் (Demat) கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பணப் பரிமாற்றங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகள், கையெழுத்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கல்வி நிபுணர்களின் ஆய்வுகளின் அடிப்படையில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவில் குற்றவாளிகளின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 13 பேருக்கு எதிராக கிரிமினல் சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆவணங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு குற்றத்திற்காகவும், மற்றும் பொதுத் தேர்வு (முறைகேடு தடுப்பு) சட்டம், 2024-இன் கீழ் உள்ள குற்றங்களுக்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் போராட்டங்களையும் ஏற்படுத்திய இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!