வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு சீசனுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் சுற்றுலா மற்றும் பொது பணித் துறை அமைச்சர் முரளீதரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முரளீதரன், சீசன் தொடங்க இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை முழுமையாக மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட சில குறைபாடுகளை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சபரிமலை சீசனில் ஆண்டுதோறும் பக்தர்களின் பெரும் கூட்ட நெரிசல் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த ஆண்டு இந்தப் பிரச்சினையை தீர்க்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசலை கண்காணித்து கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரியல்-டைம் கேமராக்கள், AI அலசல் மென்பொருள் மூலம் பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணித்து, தேவையான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு படைகளை நிறுத்தவும், பக்தர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் அனைத்து பக்தர்களும் சிரமமின்றி ஐயப்பன் தரிசனம் செய்யும் வகையில் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கேரளா வேணாம்! தமிழ்நாட்டை மட்டும் பாத்துக்குங்க!! பொறுப்பு கவர்னர் அர்லேகருக்கு அமித்ஷா முழு அதிகாரம்?!

மேலும், சீசன் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் தலைமையில் தென் மாநில மந்திரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவ வசதி, சுகாதாரம், தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிடப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் சீசன் நடைபெற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பக்தர்கள் நலனே முதன்மை என்ற அடிப்படையில் துறைவாரியாகப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்... காரணம் என்ன?