ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் மிக முக்கிய ஆதாரமாக கிடைத்த 'கோ புரோ' கேமரா, தாக்குதலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு சீனாவில் செயல்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கேமரா குறித்த கூடுதல் தகவல்களைப் பெற சீனாவின் உதவியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நாடியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தபோது, லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' (TRF) பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் விசாரணையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கைப்பற்றப்பட்ட 'கோ புரோ' கேமரா முக்கிய ஆதாரமாக அமைந்தது.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தாவுக்கு ஆப்பு! ஐநாவில் இந்தியா செக்!! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!
இந்த கேமராவை டிஜிட்டல் பிரேஸ் ஆய்வு செய்தபோது, தாக்குதலுக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு, அதாவது 2025 ஜனவரி 30-ம் தேதி சீனாவின் டாங்குவான் (Dongguan) பகுதியில் இந்த கேமரா முதன்முதலில் இயக்கப்பட்டது தெரிய வந்தது.

தாக்குதலுக்கு முன்பு உளவு பார்க்கவும், இடத்தை ஆய்வு செய்யவும் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. மேலும், இந்த கேமரா மூலம் பயங்கரவாதிகள் எப்படி சதித் திட்டம் தீட்டினார்கள், யார் யாருக்கு இணைப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதனால், கேமராவின் முந்தைய பயன்பாடு, உரிமையாளர் விவரங்கள், பணம் கொடுத்து வாங்கியது யார், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வசம் எப்படி வந்தது போன்ற முக்கிய தகவல்களைப் பெற சீனாவுக்கு என்.ஐ.ஏ. சார்பில் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா - சீனா இடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை ஐ.நா. மாநாட்டு விதிகளின் கீழ் பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் உடன்பாடு கொண்டுள்ளன. இதன்படி சீனா உதவி வழங்க வாய்ப்புள்ளது. இந்த விசாரணை மூலம் பஹல்காம் தாக்குதலின் முழு சதி வலையை அம்பலப்படுத்த முடியும் என என்.ஐ.ஏ. எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் ஸ்கெட்ச்! இந்தியா பதிலடி! ஒயிட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் வேட்டை!!