பாகிஸ்தான் தன் முக்கிய நுார்கான் விமானப்படை தளத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பலத்த சேதமடைந்த இந்த தளத்தை எதிர்கால தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ராவல்பிண்டியில் அமைந்துள்ள நுார்கான் விமானப்படை தளம், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் கடுமையான சேதத்தை சந்தித்தது. தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு ஆகியும், சேதமடைந்த பகுதிகளின் பழுதுபார்ப்பு பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இது இந்திய தாக்குதலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
தற்போது ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரின் தலைமையில், போர் விமானங்களை மறைத்து வைக்கும் பிரத்யேக ஹேங்கர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஹேங்கர்கள் வெறும் மழை அல்லது வெயிலில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல, உளவு அமைப்புகளின் பார்வையில் இருந்து விமானங்களை மறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

திறந்தவெளியில் விமானங்கள் நிறுத்தப்பட்டால், செயற்கைக்கோள் மூலம் இந்தியா எளிதாக கண்காணித்து தாக்க முடியும் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் மோதலில் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதையும் திறந்தவெளியில் விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
நுார்கான் தளம் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளங்களில் ஒன்று. இங்கு போர் விமானங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்திய தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தன் விமானப்படை தளங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த புதிய கட்டுமானங்களை தெளிவாகக் காட்டுகின்றன. இது பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்திய-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், நுார்கான் தளத்தில் நடைபெறும் இந்த பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் பிராந்தியத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!