மேற்குவங்க மாநிலத்தில் நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். பராக்பூரில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “மக்களே எனது குடும்பம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
பிரதமர் மோடி பேசுகையில், “சுதந்திரப் போராட்டத்துக்கு வலிமை அளித்த பராக்பூர், இப்போது மேற்குவங்கத்தின் மாற்றத்துக்கான பாதையை அமைக்கிறது. அனைவருடனும் வாழ்வதில்தான் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். நீங்களே எனது குடும்பம். மேற்குவங்கத்துக்கு சேவை செய்வதும், அதைக் காப்பாற்றுவதும் எனது விதியல்ல, எனது கடமை” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “மாநிலம் முழுவதும் ஒரே குரல் எதிரொலிக்கிறது – மாற்றம் தேவை, பாஜக ஆட்சி வேண்டும். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். மே 4-ம் தேதிக்குப் பிறகு பாஜகவின் பதவியேற்பு விழாவுக்கு நான் திரும்பி வருவேன். பாஜக ஆட்சி அமைக்கும். அந்த விழாவில் நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கிறேன்” என்று உற்சாகமாகப் பேசினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

பிரசாரத்தின்போது ஹெலிபேடில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் இருபுறமும் மக்கள் அலைமோதியதைச் சுட்டிக்காட்டிய மோடி, “இரட்டை இன்ஜின் அரசு என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வாழ்த்துவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்றார்.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர், “தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்துள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எதிர்கால வளர்ச்சிக்கு தெளிவான செயல் திட்டம் இல்லை. திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இரட்டை இன்ஜின் அரசு தேவை. மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் விரைவான வளர்ச்சி சாத்தியம்” என்று வலியுறுத்தினார்.
மேற்குவங்கத்தில் இது கடைசி பிரசார நிகழ்வு என்பதால், பிரதமரின் பேச்சு மாநிலம் முழுவதும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி அமைக்கும் நம்பிக்கையுடன் பிரதமர் பேசியது, கட்சி தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மக்களின் ஆதரவைப் பெற்று, மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மே 4-ம் தேதிக்குப் பிறகு மாநில அரசியல் எப்படி மாறும் என்பதை பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!