மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவார் நகரில் ஆயிரத்து பத்து கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் நேரடியாக எரிவாயு வழங்கும் கேஸ் பைப் லைன் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பிரதமர் மோடி கலந்துகொண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; மேற்கு வங்கத்தின் உள்கட்டமைப்பு, புதுமை திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வேகப்படுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு மேற்கு வங்கத்தின் பங்களிப்பு அவசியமானது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி அடித்தளமாக உள்ளது.

மக்கள் இனி சிலிண்டர் வாங்க வேண்டியது இல்லை. பைப் லைன் மூலம் எரிவாயு வழங்கும் திட்டமானது வீடுகளுக்கே வந்து சேரும். மத்திய அரசின் கொள்கைகள் திட்டங்களாக வீட்டு வாசலுக்கே வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இது.கடந்த சில ஆண்டுகளில் எரிசக்தி துறையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். எரிசக்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்று பிரதமர் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இன்னும் பலமான அடி கொடுத்திருக்கலாம்! ஏன் விட்டு வைத்தோம் தெரியுமா? ராஜ்நாத் சிங் விளக்கம்..
அரசு விழாவைத் தொடர்ந்து அலிப்பூர்துவாரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். மேற்கு வங்க மாநிலம் இன்று தொடர்ச்சியான பல நெருக்கடிகளால் போராடிக்கொண்டு இருக்கிறது.

மக்கள் இரக்கமற்ற அரசாங்கத்தை விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்றனர். ஊழலும், கொடுமைகளும் தேவையில்லை என அவர்கள் கூறுகின்றனர். வன்முறையையும், தாய்மார்கள், சகோதரிகளிடையே அதிகரிக்கும் பாதுகாப்பற்ற உணர்வையும் மக்கள் விரும்பவில்லை.
வேலையின்மையால் இளைஞர்களிடையே விரக்தி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் சுயநல அரசியலாலும் மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அது ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது. முர்ஷிதாபாத், மால்டாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொடுமைகளுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கும் தெளிவான சான்றுகளாக உள்ளன.
அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடந்த ஊழல் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலத்தை அரசு அழித்துவிட்டது. மாநிலத்தின் கல்வி முறையும் சீரழிந்து வருகிறது.

ஆனால் இப்போது கூட திரிணாமுல் காங்கிரஸ் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதற்கு பதிலாக நீதிமன்றங்களை குறை கூறுகின்றனர். மேற்கு வங்க இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆளும் அரசு செய்த ஊழல்களின் சுமைகளை சுமந்து வருகின்றனர். அவர்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
வன்முறை, ஊழல் மற்றும் தாஜா அரசியலில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு விடுதலை தேவை. பாரதிய ஜனதா தொண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது எப்படி என்ற சவால் நம் முன் இருக்கிறது. அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்து, அவர்களுடைய வளர்ச்சிக்கு நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: இதுவரை கொடுத்ததுலேயே இதுதான் மரண அடி! பாகிஸ்தானுக்கு எதிராக பிரான்சில் இந்திய எம்.பிக்கள் குழு சூளுரை..